
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான தன் கணவரை தலையில் அடித்துக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு கணவரை காணவில்லை என்று நாடகமாடிய இளம் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30) இவருக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு ஏதாவது காரணங்களுக்காக தினசரி சண்டை நடந்துள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 20 ந் தேதி வீட்டிலிருந்து சென்ற தன் மகனைக் காணவில்லை என்று பாண்டித்துரையின் தாயார் மீனாட்சி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அன்றே விசாரணையை தொடங்கிய போலீசாருக்கும் விடை கிடைக்கவில்லை.

இந்நிலையில் 12 நாட்களுக்கு பிறகு பாண்டித்துரையின் வீடு அருகே உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசார் வந்து ஆய்வு செய்ததில் அங்கு, கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதை உறுதி செய்தனர். சடலத்தை மீட்டுப் பார்த்த பிறகு சடலமாக மிதந்தது 12 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பாண்டித்துரையின் உடல் என்பது தெரிவந்தது. முதல்கட்ட விசாரணையில் தான்தான் என் கணவரை தலையில் தாக்கி கொன்று கிணற்றில் தூக்கி வீசினேன் என்று நந்தினி கூறியுள்ளார். நந்தினியை கைது செய்த போலீசார் எதற்காக பாண்டித்துரை கொல்லப்பட்டார்? நந்தினியுடன் வேறு யாரெல்லாம் உடந்தையாக இருந்து கிணற்றில் தூக்கி வீசியது? போன்ற காரணங்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமாக 4 மாதத்தில் கணவனை மனைவியே கொன்று கிணற்றில் வீசிவிட்டு காணவில்லை என்ற சம்பவம் போரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.