Skip to main content

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழப்பு!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

KALLAKURICHI DISTRICT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிவலிங்ககுளம் கிராமம். இந்தக் கிராமத்தில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. அந்த நேரத்தில் அந்த ஊரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது வீட்டுக்கு அருகில் உள்ள கம்பிவேலியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்ததுள்ளது. அது தெரியாமல் அண்ணாமலையின் மகன் விக்னேஷ் (வயது 23)  கம்பி வேலியை தற்செயலாகப் பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த விக்னேஷின் தாயார் ராஜகுமாரி, அவரது அண்ணி ரோஜா ஆகியோர் மின்சாரம் பாய்வது தெரியாமல் அவரை தூக்கி உள்ளனர்.

 

இதனால், காப்பாற்றச் சென்றவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், விக்னேஷ் மற்றும் அவரது அண்ணி ரோஜா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த விக்னேஷ் தாயார் ராஜகுமாரியை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசேர்த்தனர். பிறகு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விக்னேஷ் காவல்துறையில் சேர்வதற்காகப் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த மாதம்தான் இவருக்குத் திருமணமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அவரது இறப்பு அந்த ஊரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்