செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சென்று, அங்கு உணவு பார்சல் வாங்கியுள்ளனர். அப்போது அவர்கள், ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கூடுதலாக சாம்பார் கேட்டுள்ளனர்.
ஆனால், ஹோட்டல் மேற்பார்வையாளர் அவர்களுக்கு கூடுதல் சாம்பார் தர மறுத்துவிட்டார். இதனையடுத்து, சங்கரும், அருண்குமாரும் சேர்ந்து ஹோட்டல் மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. அதன்படி, அவர்கள் இருவரும் ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கீழே விழுந்த அருண், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான அருணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமாரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதலாக சாம்பார் தராததால் ஹோட்டல் மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.