Skip to main content

சொல் பேச்சை கேட்காத மனைவியை 12 இடங்களில் கத்தியால் குத்திய கணவன்

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

gf

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது மனைவி சொல் பேச்சை  கேட்க மறுத்ததால் ஆத்திரத்தில் 12 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆதிவராக நல்லூர் பகுதியில் வசிக்கும் சாமிநாதன் (வயது 44),   பிரேமா (வயது 40) தம்பதியினருக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகிறது. சாமிநாதன் கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தம்பதியினருக்கு  மூன்று பெண் பிள்ளைகள் உள்ளது. அதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில் ஒரு பெண் பிள்ளைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரேமா கடந்த ஏழு மாதங்களாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான ஆதிவராகநல்லூருக்கு  வந்து தனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழுந்துள்ளார். 

 

இந்நிலையில், தான் மீண்டும் திருப்பூருக்கு வேலைக்குச் செல்வதாக கணவன் சுவாமிநாதனிடம் மனைவி பிரேமா கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கணவன் மீண்டும் திருப்பூருக்கு செல்லக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளார். இவர்களுக்கு இடையான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை காய்கறி வெட்டும் கத்தியால் 12 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். தகவலறிந்த புவனகிரி போலீசார் சுவாமிநாதனை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். கத்தி குத்துப்பட்ட  பிரேமா பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்