Skip to main content

கல்லூரி மாணவியோடு ஓடிய கணவன்... 2 குழந்தைகளோடு தீ வைத்துக்கொண்டு இறந்த மனைவி... சோகத்தின் உச்சத்தில் கிராமம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

ddd

 

அழகான மனைவி, பள்ளிக் கூடம் செல்லும் 2 அற்புதமான ஆண் குழந்தைகள் இருக்கும்போது சபலத்தின் உச்சத்தால் கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானப்பட்ட மனைவி, தன் 2 குழந்தைகளையும் தன்னையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டு இறந்துபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). 10 வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்தவர். பிறகு திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். அவரது மனைவி ராதா, மகன்கள் அபிஷேக், அபரீத். இந்த அழகான குடும்பம் நன்றாகவே போனது.

 

அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார் முத்து. அதனடிப்படையில் அந்த வீட்டிலுள்ள ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இப்படித் தொடங்கிய நட்பு நாளடையில் குடும்ப நட்பாக மாறியது. ஆனால் அந்த நட்புதான் அந்த வீட்டில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் தகாத உறவாக மலரக் காரணமானது. இதைத் தொடக்கத்திலேயே முத்துவின் மனைவி ராதா கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. 

 

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு முத்து அந்தக் கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். இந்தத் தகவல் ஊரெல்லாம் பரவியதால் ராதாவுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இந்த அவமானங்களில் இருந்து மீள வழிதேடாத ராதா அவசரப்பட்டுவிட்டார்.

 

ஆம், நேற்று மாலை அறந்தாங்கி சென்று கேனில் பெட்ரோல்வாங்கி வந்துள்ளார் ராதா. மாலை, சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு தூங்குவதற்கு காத்திருந்த ராதா, வீட்டின் கதவுகளை உள்பக்கம் பூட்டிக் கொண்டு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து செல்லக்குழந்தைகள் உடலில் ஊற்றியுள்ளார். பின்னர், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். குழந்தைகளின் அலறல் சத்தம் அந்தப் பகுதியே எதிரொலிக்க, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து, வீட்டுக்குள் போய் பார்த்தபோது ராதாவும் ஒரு மகனும் கரிக்கட்டையாக எரிந்து இறந்து கிடந்தனர். ஒரு சிறுவன் மட்டும் 90 சதவீதம் தீக்காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டிருக்க அவசரமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை. சிகிச்சை பலனின்றி அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தான். 

 

Ad

 

இது குறித்து ராதாவின் உறவினர்கள் கூறும்போது, முத்துவைக் கைது செய்ய வேண்டும் என்றனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, இப்படி ஒரு மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து எப்படி முத்துவால் படிக்கிற புள்ளையோடு ஓட முடிந்தது. கல்லூரி மாணவி என்கிறார்கள். அந்த பெண்ணுக்கும் எங்கே போனது புத்தி. ஏற்கனவே மனைவி, குழந்தைகள் இருப்பது தெரிந்தும் இப்படி செய்யலாமா? இப்ப ஒரு குடும்பமே அழிந்து போனதே? முத்து மற்றும் அந்த மாணவியைக் கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்