Skip to main content

ஆர்டர்லிகளை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/06/2022 | Edited on 22/06/2022

 

High Court orders withdrawal of orderlies!

 

 

காவலர் பயிற்சி பெற்றவர்களை ஆர்டர்லிகளாக நியமிப்பது குற்றம் எனத் தெரிவித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பான, வழக்கில் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் இருப்பவர்களைக் கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என்றும்,  காவல்துறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். 

 

உயரதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே, கருப்புப் பிலிம் பயன்படுத்துவது, காவல்துறையினர் பெயர்களை அவரது வாகனங்களில் தவறாகப் பயன்படுத்துவது, வீடுகளில் ஆர்டர்லி  என்ற பெயரில் காவல்துறையினரை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அண்மை நாட்களில் அதிகமாக இருப்பதாகவும், இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார் நீதிபதி. 

 

மேலும், இவை சீரழிவுக்கும், அரசியல் அமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்திருந்தார். காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் எடுத்த நடவடிக்கை குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும் அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

ஆர்டர்லி முறைப்படி கவனத்தில் கொள்ளுமாறு, தமிழக டி.ஜி.பி.க்கு உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியிருப்பதாகவும், காவல்துறையினர் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

அரசின் விளக்கத்தில் திருப்தி அளிப்பதாக கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி முடித்து 45,000 ரூபாய் ஊதியம் பெறும் காவலர்களை, உயரதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்துவது குற்றம் ஆகும். அதேபோல், ஆர்டலிகளைப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், காவல்துறையின் தற்போதைய அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் வீடுகளில் உள்ளஆர்டர்லிகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

 

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்