கடந்த 1997 ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் 1 உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்கு தொடர, விடுதலை செய்யவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு,"மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் , எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடியும்வரை மேலவளவிற்குள் நுழையக்கூடாது என உத்தரவிட்டனர். அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், அதனை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்தவும் வேண்டும். 2 மற்றும் 4 ஆம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் நன்னடத்தை அலுவலர் முன்பாக ஆஜராக வேண்டும்.
வேலூர் எஸ்.பி முன்பாக 1 வது மற்றும் 3 வது ஞாயிற்றுக் கிழமைகளில் ஆஜராக வேண்டும். முன்விடுதலை ஆனவர்கள் பாஸ்போர்ட்டை மதுரை எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல இது தொடர்பாக எவ்வித கூட்டம், போராட்டம் நடைபெறவும் அனுமதிக்கக்கூடாது. அதனை மதுரை எஸ்.பி உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.