தமிழகத்தில் 21 மாவட்டங்களில் 11ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய இரு நாட்களும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9 ஆம் தேதி முதல் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 9ம் தேதி முதல் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும்.
மேலும், இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அல்லது பருவமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திருவாரூரில் ஒரு நபர் மழையின் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இறந்த நபர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.