Skip to main content

சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பாரம்பரிய உணவு கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சாலை பாதுகாப்பு வார விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியை கலைநிகழ்ச்சியும்,பாரம்பரிய உணவு வகைகளும் கலந்த பிரம்மாண்ட நிகழ்வாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பந்தநல்லூர் காவல்துறையினர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவின் கடைசி நிகழ்வு பந்தநல்லூர் கடைவீதியில் நடந்தது. பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி கடைவீதி வரை அரை கிலோ மீட்டர் கிராமிய பாடல்கள், கரகாட்டம் என கலைநிகழ்ச்சியோடு வந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுணா வழங்கிவந்தார், பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் புடைசூழவந்தனர்.

துண்டுபிரசுரத்தில் " தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, அதிக பாரம் ஆபத்தில் முடியும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு, மருத்துவமனை பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே," என்பன உள்ளிட்ட 20 சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வரிகளை பட்டியலிட்டு இருந்தனர்.

நிகழ்ச்சியை பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா ஏற்பாடு செய்திருந்தார், நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், நாச்சியார்கோவில்,  திருப்பனந்தாள், உள்ளிட்ட காவல்துறை ஆய்வாளர்களும் காவலர்களும் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கரகாட்டத்துடன் கூடிய கிராமிய பாடல்களும், விழிப்புணர்வு குறித்தான ஆடல் பாடல்களும் முழங்கின. பாரம்பரிய முறையில் செய்யப்பட்டுள்ள உணவு வகைகளை மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கி அசத்தினர்.

வழக்கமாக சாலை பாதுகாப்பு விழா என்பதை சம்பிரதாய விழாவாக நினைத்து பத்து பைக்கில் வந்து நோட்டீஸ் கொடுத்துவிட்டு செல்லுவதே வாடிக்கையாக பார்த்துவரும் நிலையில், வாகனம் ஓட்டும்போது உயிரை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அதே போல் உடல்நலத்தை பாதுகாக்க ரசாயனத்தை தவிர்த்து பாரம்பரிய உணவும் அவசியம் என்பதுபோலவும்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிக அருமை என பலரும் பேசியதை காணமுடிந்தது.

  

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.