Skip to main content

அஞ்சுகிறாரா ஆளுனர்? நேர்மை இருந்தால் உயர்கல்வி ஊழல் பற்றி விசாரணை நடத்துக!-ராமதாஸ்

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

சென்னையில் அண்மையில் உயர்கல்வி மேம்பாடு குறித்து நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் பணி நியமனத்தில் பல கோடிகள் புரண்டதாக தெரிவித்தார். துணை வேந்தர் பணி நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடக்க வேண்டும் ஆனால் இப்படி பல கோடிகள் வாங்கிக்கொண்டு துணை வேந்தர்களை நியமித்தது கண்டு வருத்தமடைந்தேன். அந்த நிலையை மாற்ற வேண்டும். இதுவரை தகுதி அடிப்படையில் 9 துணை வேந்தர்களை தான் நியமித்துள்ளேன் எனவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இது குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

pmk

 

‘‘சட்டத்தின் முன் சாமானியர்கள் பல்டி அடித்ததை இந்த நாடு பார்த்திருக்கிறது. ஆனால், அதிகாரத்தின் முன் ஓர் ஆளுனரே பல்டி அடிப்பதை இப்போது தான் இந்நாடு காண்கிறது’’ என்று குறிப்பிடும் வகையில் தான் உயர்கல்வித்துறை ஊழல்கள் தொடர்பான ஆளுனர் பன்வாரிலாலின் நிலைப்பாடுகள் உள்ளன. ஊழலை ஒழிக்க வந்தவரைப் போன்று இரு நாட்களுக்கு முன் பேசிய ஆளுனர் பன்வாரிலால், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஊழல் காப்பாளர் வேடம் தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

 

சென்னையில் கடந்த 6&ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக நான் நேரடியாகக் கூறவில்லை; கல்வியாளர்கள்  கூறியதைத் தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்து இச்சிக்கலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

 

ஆளுனரிடம் இது எதிர்பார்த்தது தான். கடந்த 6&ஆம் தேதி நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் துணை வேந்தர் நியமன ஊழல் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆளுனர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஆளுனரின் உரைக் குறிப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல் குறித்த பகுதி நீக்கப்பட்டிருந்தது. யாருக்கு அஞ்சி இது நடந்தது என்பது தெரியவில்லை. இப்போது அதை விட ஒருபடி மேலே போய் யார் மீதும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையோ அல்லது பணப் பரிமாற்ற குற்றச்சாட்டையோ முன்வைக்கவில்லை என்று ஆளுனர் கூறியிருக்கிறார். ஆளுனரிடம்  நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி, ‘‘ துணைவேந்தர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக உங்களிடம் கல்வியாளர்கள் கூறிய குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா.... இல்லையா?’’ என்பது தான்.

 

ஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆளுனர் நம்பவில்லை என்றால், துணைவேந்தர் நியமனத்தில் அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்? 

 

ஆளுனர் மாளிகை வெளியிட்ட விளக்க அறிக்கையின் இறுதியில், முந்தைய ஆளுனர்களால் நியமிக்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழலுக்காக கைது செய்யப்பட்டது,  மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லமுத்து உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டது, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் கட்டியுள்ளார். இதன் மூலம் அவர்கள் ஊழல்வாதிகள் என்கிறாரா அல்லது அப்பாவிகள் தவறாக தண்டிக்கப்பட்டனர் என்கிறாரா?

 

ஆளுனர் என்பவர் அவரது பார்வைக்கு வரும் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறிய அது குறித்து விசாரித்து உண்மை நிலையை அறிய வேண்டிய ஆளுனரின் கடமை. அந்தக் கடமையை ஆளுனர் செய்தாரா?

 

ஒருவேளை ஆளுனர் விசாரணை நடத்தி அதில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காதது ஏன்? தவறே நடக்கவில்லை என்றால் துணைவேந்தர்கள் நியமனம் மிகவும் நேர்மையாக நடந்தது என்று அறிவிக்காதது ஏன்?

 

2018&ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் நேர்மையாக, வெளிப்படையாக, விதிகளைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பன்வாரிலால் புரோகித் கூறுகிறார். ஒப்பீட்டளவில் இந்த துணைவேந்தர்கள் நியமனம் ஓரளவு நியாயமாக நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இப்போது நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களைவிட திறமையான கல்வியாளர்கள் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டது என்றால் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது முதல்  ஆளுனரால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை அனைத்தும் எந்த அடிப்படையில் நடந்தது என்பது குறித்து ஆளுனர் மாளிகை வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

 

ஆளுனர் பன்வாரிலால் அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் கையூட்டு பெறாதவர்களாக  இருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் நேர்மையானவர்கள் அல்ல. உதாரணமாக  பெரியார் பல்கலைக் கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் உயர்நீதிமன்ற ஆணைப்படி பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இதற்காக அவர்களிடமிருந்து துணைவேந்தர் ஒரு பைசா கூட வாங்கவில்லை. ஆனால், துணைவேந்தருக்கு தெரிந்தே 11 பேரிடமிருந்து உயர்கல்வி அமைச்சர் அவரது தரகர்கள் மூலம் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.1.65 கோடி கையூட்டு வசூலித்தனர். கையூட்டு தர மறுத்த 4 பேரையும்,‘‘ நீங்கள் தகுதிகாண் காலத்தை (Probationary Period)’’ நிறைவு செய்ய முடியாது என அமைச்சரின் ஆட்கள் மிரட்டுகின்றனர். இவை அனைத்தையும் தடுக்காமல் துணைவேந்தர் குழந்தைவேலு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்கு மறைமுகமாக துணை போகும் அவர் நேர்மையானவரா?

 

தமிழக ஆளுனர் பன்வாரிலாலின் தொடக்ககால செயல்பாடுகள் அவர் நேர்மைப் பயிருக்கு காவலாக இருப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால், இப்போதோ அவர் ஊழல் களைக்கு காவலரோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்தப் பார்வையை போக்க வேண்டியது ஆளுனர் புரோகித்தின் கடமையாகும்.

 

 

தமிழ்நாட்டில் ஆளுனரின்கீழ் உள்ள 20 பல்கலை.கள் உட்பட மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி விரிவாக தொகுத்திருக்கிறது. ஆளுனர் அழைத்தால் எந்த நேரமும் அந்த ஊழல் பட்டியலை ஆளுனரிடம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் ஆளுனராக இருந்தால் அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஆணையிட வேண்டும். செய்வாரா? என்ற பல கேள்விகளை  எழுப்பியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.