!["Government of Tamil Nadu must ensure that quarries operate in accordance with the rules" - Court instruction](http://image.nakkheeran.in/cdn/farfuture/hyJ2foCzI4_1JS3BbGJvf5-dqxajO4EdvwO4kRjBEvA/1625911452/sites/default/files/inline-images/judge-sanjeeb-banerjee_5.jpg)
உரிமம் விதிகளுக்குட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா, திருநீர்மலை நகர பஞ்சாயத்தில் விதிகளை மீறி செயல்படும் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து, குவாரியை மூட உத்தரவிடக் கோரி உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிகளைமீறி செயல்படும் குவாரியை மூடக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளுக்குட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.