Skip to main content

மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி? தட்டிக்கேட்டவரை வீடு புகுந்து தாக்கிய கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Government school cleaning with students

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது பைத்தன்துறை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுத்தம் செய்து வருவதாகவும் மாணவர்களைக் கொண்டு குப்பை அல்ல செய்வதாகவும் அதே கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவர்களைக் கொண்டு சுத்தம் செய்தால் இன்னும் நன்றாக சுத்தம் செய்யலாமே எனச்சொல்லி உள்ளார். இது பற்றி அதிகாரிகளுடன் புகார் தெரிவிப்பேன் இனி எப்படி நடக்கக் கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்

இந்த நிலையில், மாணவர்களை எப்படி சுத்தம் செய்ய வைப்பீர்கள் என நீ எப்படி கேட்கலாம் எனப் பைத்தம்துறை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மற்றும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர் பைத்தன்துறை பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை மற்றும் வீடு வைத்துள்ள தீனதயாளனின் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி  உள்ளனர்.

அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தீனதயாளன், அவர்களிடம், “நான் எனது கருத்தை மட்டுமே கூறினேன்..” எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி என்பவர் தீனதயாளனைக் காலணியால் அடித்து  அவரைக் கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் தீனதயாளனை தாக்கியுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்காக கேள்வி எழுப்பியவரை தாக்கியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மீதும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டாம் எனக் கருத்து கூறிய நபரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்; அரசுப் பள்ளியில் பரபரப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Government school teacher arrested for misbehaving with student

நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தர்மபுரியில், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்தவர் சரவணன்(48). இவர் தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், ஆசிரியர் சரவணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தர்மபுரி மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கெனவே இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் இருந்து வந்த அந்தச் சிறுமிக்கு, ஆசிரியர் சரவணன் அவ்வப்போது கல்வி மற்றும் குடும்பச் செலவுக்கான உதவிகளைச் செய்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே  நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது.

அந்தச் சிறுமி, பிளஸ்2 படிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். அதன்பிறகு ஆசிரியர் சரவணனுடன் அவர் சரியாகப் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில்தான் சரவணன் அவரைச் சில நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியரைக் காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் ஜூன் 27ஆம் தேதி கைது செய்தனர். ஆசிரியர் சரவணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதும் அவருடைய மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

நடப்புக் கல்வி ஆண்டு  தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள் ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம்  தர்மபுரி மாவட்ட ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.