Skip to main content

அரசே கருணை அடிப்படையில் எங்களுக்கு நம்பிக்கை கொடு... !!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

சராசரி மனிதர்களுக்கு உள்ள உயரம் மற்றும் உடல் தகுதி எங்களுக்கு இல்லை அதற்கு காரணம் நாங்களல்ல இது ஒரு பிறவி குறைபாடு ஆனாலும் மனம் சோர்ந்துவிடாமல் நம்பிக்கையுடன் வாழ்கிறோம். எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்த அரசு தான் முன்வர வேண்டும் என எதார்த்த வாழ்வியலை எதிர்பார்ப்புடன் பேசினார்கள் கணவன், மனைவியான இந்த குள்ளமான தம்பதியினர்.

ஈரோடு மாவட்டம்  சென்னிமலையை சேர்ந்தவர் 27 வயது சரண்யா, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது கார்த்திகேயன் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.பிறவியில் இருவரும் குள்ளமான தம்பதிகள்.

இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சரண்யா தனது கணவர் கார்த்திகேயனுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.
 

Government give us confidence in mercy ... !!

 

பிறகு அவர்கள் கூறும்போது,

"நான்  பி.ஏ, பி.எட்  முடித்துள்ள பட்டதாரி. எனது கணவர்   பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளார்.  அவர் ஜவுளி தொழிலில் தொழிலாளியாக பனியாற்றி வருகிறார். அதில் போதிய வருமானம் இல்லை. எங்கள் வாழ்வில் வறுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. சராசரியாக உடல் உயரம் உள்ளவர்கள் போல் கடினமான கூலி வேலை எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை. எங்களைப் போன்றவர்களுக்கு அரசு தான் சிறப்பு கவனம் செலுத்தி குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்து வாழ்க்கை நடத்த உதவ வேண்டும். 

நாங்கள் படித்துள்ளோம் எங்கள் இருவருக்கும் அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் சமூகத்தில் நாங்களும் சராசரி மனிதர்கள் போல வாழ முடியும். அரசு செய்ய வேண்டும்." என வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், ஏக்கத்துடனும் பேசினார்கள்.

இவர்களுக்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.