![Girl sickle in broad daylight; stir in Sivagangai](http://image.nakkheeran.in/cdn/farfuture/KwoApeDDMoSFMC1pNRlbk5Mm5b1Gou_Y6USdulgpkNc/1728555838/sites/default/files/inline-images/A1078.jpg)
சிவகங்கை அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா. இவர் சிவகங்கையிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் பயின்று வந்தார். சிங்கம்புணரி பிரான்மலை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக மோனிஷாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு மோனிஷாவின் வீட்டிற்கே சென்று இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை மாணவி வீட்டார் விரட்டியடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மதகுப்பட்டிக்குச் சென்று மீண்டும் மீண்டும் மாணவி மோனிஷாவை சந்தித்து தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இன்று ஆகாஷ், மாணவி மோனிஷாவை சந்தித்து தன்னுடைய காதலை கூறியுள்ளார். மாணவி அப்பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் மோனிஷாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார். பின்னர் அருகில் கிடந்த பீர் பாட்டிலால் தன்னையும் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்து சென்ற மதகுபட்டி போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.