Skip to main content

விநாயகர் சிலைகளை அறநிலையத்துறையே சேகரித்து நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்! – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

vinayagar statue

 

விநாயகர் சதுர்த்திக்கு பின், கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை,  இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேகரித்து,  நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என,  சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.  

 

கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளைக் கடலில் கரைக்கவும்,  தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடை  உத்தரவை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிநபர்கள்  வீடுகளில் வைத்து வழிபடவும், அந்த சிலைகளை,  தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.  அதேபோல், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை,  கோவில் வாயில்களில் வைத்துவிட்டுச்  செல்லவும் அனுமதி வழங்கினர்.

 

மேலும், பொது இடத்தில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தான் அரசாணை தடை செய்வதால், அமைப்புகள் சார்பில் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தக்கூடாது எனவும், இதை மீறுவோருக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர். தனிநபர்கள்,  சென்னையில் மெரினா கடற்கரையைத்  தவிர்த்து,  பிற நீர்நிலைகளில் சிலைகளைக்  கரைக்க  நீதிபதிகள் அனுமதித்தனர்.

 

இந்நிலையில், கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை, அறநிலையத்துறையே சேகரித்து கரைக்க அனுமதிக்க வேண்டும் என,  தமிழக அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வீடுகளில் வைத்து வழிபட்ட பின் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் சேகரித்து, அதனை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்