Skip to main content

“இரண்டு அமைச்சர்கள் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து  ராஜினாமா செய்ய வேண்டும்” - சி.வி.சண்முகம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Fasting struggle against the DMK government tindivanam

 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக சுமார் 1502 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

 

இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி. சண்முகம் தலைமையில் 27 ஆம் தேதி திண்டிவனத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Fasting struggle against the DMK government tindivanam

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய எம்.பி சண்முகம், “அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க அரசு ரத்து செய்து வருகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.  தமிழகத்தில் கமிஷன் அரசு தான் நடக்கிறது. கமிஷன் பெரும் ஏஜெண்டாக அதன் அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

 

பினாமி பெயரில் உள்ள பல்கலைக்கழகங்களை நடத்த அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களை ஸ்டாலின் மூடி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். இங்கு சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்படுகிறது. அந்தக் கால கட்டங்களில் குடிதண்ணீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும்  சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே தான் மாவட்ட மக்களின் நலனை முன்னிட்டு நல்ல தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் திண்டிவனம் போன்ற நகராட்சிகளும், மரக்காணம், கோட்டகுப்பம், செஞ்சி, அனந்தபுரம், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளும் 692 ஊராட்சிகளும் பயனடையும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சேலம் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.

 

இது சிக்கலானது நடைமுறை, சாத்தியம் இல்லாதது. திமுக அரசு லஞ்சம் பெறுவதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அதற்கான தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை அடிப்பது யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்