Skip to main content

போலி ஏ.டி.எம். கார்டுகள்! புதுவையில் சிக்கிய டெக்னாலஜி திருடன்கள்!

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

 

    

atm card


“உங்ககிட்ட இருக்குற பணத்த திருட உங்க வீட்டு சாவி எனக்கு தேவையில்ல. உங்கள பத்தின தகவல் மட்டும் எனக்கு தெரிஞ்சாப் போதும். மொத்த பணத்தையும் உங்களுக்கே தெரியாம பத்திரமா நான் எடுத்து செலவு பண்ணிடுவேன்' என அண்மையில் வெளியான தமிழ் படம் ஒன்றில் அதன் வில்லன் நடிகர் மிரட்டலாக இந்த வசனத்தை பேசியிருப்பார். அது, சினிமா வசனம் என்றாலும் அதே பாணியில் மக்களுக்கு தெரியாமலேயே சாமானியர்கள் துவங்கி பில்லியனர்கள்வரை அனைவரது பணத்தையும்  ‘அபேஸ்’ செய்துள்ளது புதுச்சேரியை கலக்கிவரும் ஏ.டி.எம். கொள்ளை கும்பல்.
 

'புதுச்சேரியில ரெண்டு வருஷமா மக்களோட வங்கி கணக்குலேர்ந்து பணம் குறைஞ்சிட்டே வர்றதா ஒரு சீக்ரெட் தகவல் போலீசுக்கு கிடைத்தது. அந்த தகவலை அடிப்படையா வெச்சு புதுச்சேரி போலீஸ் சார்பா சீக்ரெட்டா விசாரணை நடத்திக்கிட்டு வந்தோம். அந்த சமயத்துலதான் எங்களுக்கு ஒரு போன் கால் வந்தது' என  ஏ.டி.எம். கொள்ளை கும்பல் சிக்கிய விவரத்தை நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார் புதுச்சேரி காவலர் ஒருவர். 

 

 


ஏப்ரல் 18… மதியம் 1 மணி அளவில் புதுச்சேரி போலீசாருக்கு கேரள போலீசாரிடமிருந்து  தகவல் வந்தது. 'பாலாஜி தியேட்டர் பக்கத்துல இருக்குற சித்தன்குடி ஏரியாவில் இன்டர்நெட் சென்டர்ல நிறைய போலி ஏ.டி.எம். கார்டுகள் இருக்கு' என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் தகவல். அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு சம்மந்தப்பட்ட அந்த கடைக்கு விரைந்துள்ளனர் புதுச்சேரி காவலர்கள். 'நாங்க உள்ள போய் பார்த்தப்போ எங்களுக்கே அதிர்ச்சி கொடுக்குற மாதிரியான காட்சிகளை அந்த கடைக்குள்ள பார்த்தோம்' என்ற குற்ற பிரிவை சேர்ந்த போலீஸ் நம்மிடம், “சில ஓடாத கம்யூட்டர்களுக்கு மத்தியில் வெள்ளை நிறத்தில் நூத்துக்கணக்கான ஏ.டி.எம். கார்டுகள் போலவே இருந்த போலி ஏ.டி.எம். கார்டுகளை, ஸ்கிம்மர் கருவிகள், பி.ஓ.எஸ். மெஷின்கள், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க தேவையான உபகரணங்கள் என ஏ.டி.எம். கொள்ளைக்கு தேவையான ஏ டூ செட் அந்த இன்டர்நெட் சென்டரில் இருந்தததால் அந்த கடையின் உரிமையாளர் பாலாஜி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து கடுமையாக விசாரித்துள்ளது போலீஸ்.

அதில், அவர்களோடு தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த கமல் மற்றும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சரவணன் என மேலும் இருவர் சிக்கியுள்ளனர். சிக்கிய நால்வருமே இரண்டு குழுக்களாக பிரிந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி என தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு ஏ.டி.எம். சென்டரை டார்கெட் செய்து அங்கு ஸ்கிம்மர் கருவியை பொருத்தும். அதன்மூலம், சம்மந்தப்பட்ட வங்கி கணக்கு பயனாளரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இரகசிய எண்ணை அறிந்து கொண்டு அதன்படி போலியான கார்டை கொண்டு ஏ.டி.எம். கார்டை உருவாக்கி பணத்தை அபேஸ் செய்திருக்கின்றனர். யார் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்துவது, யார் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என அவர்களுக்குள்ளேயே வேலைகளை பிரித்துக் கொண்டு வேலைக்கேற்றபடி கொள்ளை அடிக்கும் பணத்தை பங்கு போட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

ஏ.டி.எம். மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குதான் பணம் எடுக்க முடியும் என்பதால் பி.ஓ.எஸ். மெஷின்களை வாங்கி அதன் மூலமாகவும் பெரிய அளவில் பணத்தை ஒவ்வொரு வங்கி கணக்கிலிருந்தும் எடுத்துள்ளனர். 'எங்களுக்கு பி.ஓ.எஸ். மெஷின் வாங்கி கொடுத்ததே ஒரு கவர்மெண்ட் டாக்டர்தான். அவருக்கு, கொள்ளை அடிக்கும் பணத்தில் 30 % கமிஷன்' என பிடிபட்டவர்கள் விசாரணையில் பகீர் வாக்குமூலம் கொடுக்க… புதுவை - கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அரசு மருத்துவர் விவேக்கை தூக்கிவந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தது காக்கித்தரப்பு.
 

டாக்டர் விவேக் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலரை கைது செய்ததோடு இந்த ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக இருந்து தங்களை செயல்படுத்தியதே புதுவை - முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சந்துருஜீ தான் என போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தார் விவேக். 'அவர் கொடுத்த வாக்குமூலத்தோட அடிப்படையில சந்துருஜீயை போலீஸ் நினைச்சிருந்தா உடனடியா கைது செய்திருக்கலாம். ஆனா, அவரை கைது செய்யவே இந்த போலீஸ் டீம் காலம் தாழ்த்த, அதை சரியா பயன்படுத்திகிட்டு இப்போ ஆள் எஸ்கேப்' என்கின்றனர் காக்கிகள் தரப்பே.

 

puducherry police



யார் இந்த சந்துருஜீ?
 

28 வயதான சந்துருஜீக்கு அரசியலில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை. அதனால், அ.தி.மு.க. வில் இணைந்து கட்சிப்பணியை கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த மோசடியை செய்து வந்துள்ளார். புதுவையில் கட்சி, சின்னம் என இந்த இரண்டையும் தாண்டி பெயரும், முகமும் மக்கள் மத்தியில் நின்று விட்டால் அடுத்த தேர்தலில் அவர்தான் எம்.எல்.ஏ. அதை, சரியாக புரிந்துகொண்ட சந்துருஜீ எப்போதுமே முத்தியால்பேட்டை தொகுதியில் தன் முகம் தெரியும் விதமாக போஸ்டர் ஓட்டுவது, பேனர் கட்டுவது, தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது, புதுச்சேரியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களோடு ஃபோட்டோ எடுத்து கொண்டு, தன்னை எம்..எல்.ஏக்களின் விசுவாசி என பொதுவெளியில் காட்டி கொள்வது மாதிரியான பணியை செய்து வந்துள்ளார் சந்துருஜீ. குறுகிய காலத்தில் நட்சத்திர விடுதிகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் என பல கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே உருவெடுத்துள்ளார் சந்துருஜீ. அதற்கு, எல்லாமே இந்த கொள்ளை பணம் தான் மூலதனம் என போட்டுடைத்துள்ளது போலீஸ்.

 

 

 

”நாலஞ்சு வருஷத்துக்கு முன்ன வார ஒரு முறை குலுக்கல் சீட் நடத்தி அதுல பெரும்பாலானவங்கள ஏமாத்தினதோட கொஞ்சம் பேருக்கு குக்கர், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் டவானு பரிசு கொடுத்து ஏமாத்து வேலைய பக்கவா பண்ணினவருதான் சந்துருஜீ. அப்பவே, சீட்டு போட்ட யாராச்சும் அவர் மேல புகார் கொடுத்திருந்தா மக்களோட பணமாவது இந்நேரம் பத்திரமா இருந்திருக்கும்' என சொல்கிறார் சந்துருஜீ நடத்திய குலுக்கல் சீட்டில் பணத்தை இழந்த ஸ்ரீராம்.
 

'இந்த ஏ.டி.எம். கொள்ளைக்கும் சர்வதேச கொள்ளை கும்பலுக்கும் பெரிய அளவுல தொடர்பு இருக்கலாம்ங்கிறகோணத்துல இந்த கேஸ் போய்கிட்டிருக்கு. பலபேரு இந்த கேஸ்ல அரெஸ்ட்டாகவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா, பலகோடி ரூபாயை வெவ்வேறு மக்களோடு வங்கி கணக்குலேர்ந்து இந்த கும்பல் கொள்ளை அடிச்சிருக்கு. தொழில்நுட்பம், டெக்னிக்குனு எல்லாமே தெரிஞ்ச படிச்ச பட்டதாரி இளைஞர்கள் இந்த கேஸ்ல சம்மந்தப்பட்டிருக்கலாம்ங்கிற துப்பு கிடைக்காமே இருந்தது. எங்க விசாரணையில சந்துருஜீதான் இது எல்லாத்துக்குமே காரணம்னு தெரிஞ்சிருக்கு. அதனால, சந்துருஜிய தேடப்படும் குற்றவாளியா அறிவிச்சிருக்கோம். அவரை பிடிக்க தனித்தனியா டீம் அமைச்சிருக்கோம். கூடிய சீக்கிரம் அவர பிடிச்சிடுவோம். அதேமாதிரி முதலியார்பேட்டை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஒருவரையும் இந்த வழக்கு சம்மந்தமா தேடிகிட்டு வர்றோம். இவர்கள் கைதுக்கு அப்புறமாதான் இதுல யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்குதுங்கிற விவரம் தெரியும். இதுவரை, இந்த கேஸ்ல எந்தவொரு எம்.எல்.ஏவுக்கும் தொடர்பு இருக்குற மாதிரியான முகாந்திரம் எதுவுமே கிடைக்கல. அதே, சமயத்துல கோவையில் இந்த கொள்ளை கும்பல் பாணியலேயே மக்களோட வங்கி கணக்குலேர்ந்து பணம் குறஞ்சு வர்றதா ஒரு தகவல் வந்திருக்கு. அதனால, ஒரு டீம் கோவைக்கும் இப்போ போயிருக்கு' என சொல்கிறார் புதுவை காவல் துறையின் உயர் அதிகாரி. 

 

atm


புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, காங்கிரஸ் என முக்கிய கட்சிகளின் பிரமுகர்களும், எம்.எல்.ஏக்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மேலும், அரசியல் ரீதியான தலையீடு இருக்கறதுனால தான் இதுவரை இந்த கேஸ்ல முக்கிய குற்றவாளியான சந்துருஜீயை போலீஸ் கைது செய்யாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சொல்வதற்கு ஏற்பவேதான் புதுச்சேரியில் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் மக்கள் நலனுக்கு விரோதமான இந்த வழக்கில் கண்டும் காணாமல் கப்சிப் என அடக்கி வாசிக்கிறது.
 

'சந்துருஜீ வெளிநாடு பறந்துவிட்டார்', 'இந்த 50 நாள்ல 95 சிம் கார்டை மாத்தியிருக்கிறார்', 'தங்கள் பக்கம் இந்த கேஸ் திரும்பிட கூடாதுன்னு சந்துருஜீய கொலை செய்ய கூட அவரோட கூட்டாளிங்க தயங்க மாட்டாங்க' என பல்வேறு விதமான கட்டுக் கதைகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. சரியாக 50 நாட்களுக்கு மேல் கடந்துள்ள இந்த வழக்கில் சந்துருஜீ கைது மட்டும்தான் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். அதற்கு அரசியல் குறுக்கீடு எதுவுமே இருக்க கூடாது.  ஊழல் மோசடிக்கு எதிரான சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

 

 


சந்துருஜீ கைதானால்தான் இந்த கொள்ளையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது புதுச்சேரி போலீஸ். இந்த கொள்ளையில் வங்கி அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரது பெயர் அடிப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.  குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் கேட்க சந்துருஜீயின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆஃப் நிலையில் உள்ளது. 


-சிவரஞ்சனி


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.