Skip to main content

கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ உதவி! ஆணைய உறுப்பினர் சேலம் சிறைகளில் நேரில் ஆய்வு!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Education and medical assistance for the children of prisoners! Commission member inspects Salem jails

 

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராமராஜ், சேலத்தில் வெள்ளிக்கிழமை (27.08.2021) மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் கிளைச்சிறையில் உள்ள 4 கைதிகளின் குழந்தைகள் குறித்து விசாரித்தார்.

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் கைதிகளிடம் முதன்முதலாக குறைகள், கோரிக்கைகள் பற்றி நேரில் கேட்டறிந்தோம். கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் சார்ந்த ஏதேனும் உதவிகள் தேவைப்படுகிறதா? என்பது குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது. 

 

சில கைதிகள் தங்கள் குழந்தைளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெற்றதில் சில குளறுபடிகள் இருந்ததாகக் கூறினர். அதன்மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். 

 

கரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதுமே குழந்தை திருமணங்கள், இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் வகையில் மாநில அரசு, மாவட்டம், கிராமம், வட்டார அளவில் 6 குழுக்களை அமைத்துள்ளது. இதை வரவேற்கிறோம். 

 

இந்தக் குழுக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. தமிழக சமூகநலத்துறை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஆணையம் தயாராக இருக்கிறது. 

 

சிறைவாசிகளின் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவிகள் வழங்கப்படும். இதையடுத்து அனைத்து மத்திய சிறைகளுக்கும் சென்று ஆய்வு நடத்தப்பட உள்ளது. 

 

கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்து நேரில் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது,'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.