



இந்தியா முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நோய்ப் பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு என நடைமுறையில் இருந்தாலும் மக்களின் அசாதாரணப் போக்கு கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பின்னர், நாளை முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கரோனா நோயாளிக்கான 40% படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 50.8% பேர் வீட்டுத் தனிமையிலும், 8.55% பேர் கோவிட் கேர் மையத்திலும் உள்ளனர். தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையற்ற பதற்றத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனையில் குவிய வேண்டாம். சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கலன் அமைக்கப்பட உள்ளது. மேலும், நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தில் நாளை (25.04.2021) முழு ஊரடங்கில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தடையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.