Skip to main content

நாளை மாலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

TN ASSEMBLY ELECTION WINS DMK MLAS MEETING

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

 

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (03/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (04/05/2021) மாலை 06.00 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழுத் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

 

அதைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்