Skip to main content

தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு நிறைவு- விமர்சித்த எடப்பாடி பழனிசாமி! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

dmk govt one year completed admk leader edappadi palaniswamy pressmeet


தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தனது தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிகளவில் இழப்பீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் வறட்சிக்காக முதன்முதலாக நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் 12,51,000 குடும்பங்கள் பயனடைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. 

 

தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் எந்த புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க. அரசு. காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க திட்டம் தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் பேரில் நடந்தாய் வாழி காவிரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தது அ.தி.மு.க. அரசு.     

 

குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றினோம். கடந்த ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டு போயுள்ளது. கடந்த 2010- ஆம் ஆண்டு காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்ததும் தி.மு.க. தான், அதை ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் தி.மு.க. தான். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அம்மா மினி கிளினிக் மூலம் ஏழை மக்களுக்கு மருத்துவம் அளிப்பதைக் கூட தி.மு.க. அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

 

அ.தி.மு.க. ஆட்சியில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை மாநகரில் குற்றங்களைத் தடுக்க அ.தி.மு.க. ஆட்சியில் சிசிடிவி பொருத்தப்பட்டது. அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார் சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டினோம். சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா கொண்டு வந்தது. மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. அரசு" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.