Skip to main content

திமுக கூட்டணியுடன் ஐக்கியமாகப்போகும் தேமுதிக...?

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் களம் இறங்கி வருகிறார்கள். இதில் ஆளுங்கட்சியினர் திடீரென பாமகவை இழுத்து ஏழு பாராளுமன்ற தொகுதிகளைகொடுத்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார்கள். அதுபோல் எதிர்கட்சியான திமுகவும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பத்துதொகுதிகளை ஒதுக்கி விட்டு மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளருமான நடிகர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில்,விஜயகாந்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும்,ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். 

 

 

dmdk

 

அதுபோல் அரசியல் கட்சி பிரமுகர்களும் விஜயகாந்தை சந்தித்து வருகிறார்கள். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில்  ஆளுங்கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதற்காக பேசிவருகிறார்கள். அதேபோல் திமுகவும் தங்கள் கூட்டணியில் விஜயகாந்தை இழுப்பதற்கும் பேசிவருகிறார்கள்.

 

 

 

இதுபற்றி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது.....

 

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதாவும், சுதீஸ்சும் எங்களைப்போல் உள்ள மாவட்ட செயலாளரிடம் கூட்டணி குறித்து  கருத்துகளை கேட்டனர். அப்பொழுது அதிமுகவில் கூட்டணி வைப்பது அவர்கள் சுயநலத்திற்காக நம்மை இழுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக தான் இருக்கும். அதுபோல் பாமகவினரும், தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடுகளை இந்த தேர்தலில் காட்டி நம்மை தோற்கடிக்க வைப்பார்ப்பார்கள்.  எனவே நாம் திமுகவுடன்  கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

 

அதேபோல் திமுகவில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் கருத்து வேறுபாடு பார்க்கமாட்டார்கள். நம் பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் அரவணைத்து போவார்கள். தலைவர் கேப்டனையும் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். அதனால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் இடைத்தேர்தல் மூலம் திமுக முழுமையாக வெற்றி பெற முடியும். அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்த நமக்கு சாதகமாக இருக்கும். எனவே திமுக கூட்டணியில் நாம் சேருவது தான் நல்லது என கூறினோம்.

 

 

இப்படி எங்களை போலவே தமிழகத்தில் உள்ள 59 மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களில் 80 சதவீதம் பேர் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனால் கூடிய விரைவில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் அவர்களும் பேசி  கூட்டணிகுறித்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறோம்.

 

அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சார்பு அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி கூட்டணி குறித்து கருத்துக்களை கேட்டு தகவல் சொல்ல சொல்லி இருக்கிறார்கள். அதன்அடிப்படையில் சார்பு அணி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க இருக்கிறோம் என்று கூறினார்கள்.

 

 

 ஆக வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் மத்தியிலேயே பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது என்பதுதான் உண்மை!

சார்ந்த செய்திகள்