Skip to main content

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில்  வெளிநாட்டு வியாபாரிகளும், லட்சாதிபதிகளும் இருக்கிறார்கள்! குமுறும் மக்கள்!!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019


தமிழக அரசு அறிவித்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் வாங்குவதற்கான பயனாளிகளின் தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

 

d

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் தாங்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கூறி மனுக்களை வழங்கினார்கள். 1998, 2003, 2005ம் வருடங்களில் தயாரிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் மனுக்களை வாங்கி வருகின்றனர். 1998 முதல் 2005 வரை 761பேர்தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளனர். அதன்பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் இஷ்டம் போல் புகுந்து விளையாடியதால் தற்போது 1500 பேருக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறுகின்றனர்.

 

d

 

நேற்று ரூபாய் இரண்டாயிரம் வாங்க பேரூராட்சியில் பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே காவல்துறையினர் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியலுடன் பதிவு செய்ய வந்தவர்களில் பலர் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் ஜவுளி வியாபாரம் மூலம் சம்பாதிப்பவர்களும், நான்கு, ஐந்து வீடுகள் வைத்திருப்பவர்களும், அரசு பணியில் ஓய்வு பெற்று பென்சன் வாங்குபவர்களுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இருப்பதை பார்த்து பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

sd

 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்... சின்னாளபட்டியில் கூட்டுறவு சங்கங்களில் நிவாரணம் வாங்குவதற்காக முறைகேடாக பதிவு செய்தவர்கள் தான் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் அதிகம் உள்ளனர். அவர்களை நீக்கிவிட்டு முறையாக நெசவு நெய்து வறுமையுடன் வாழும் நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சொந்த வீடு இல்லாதவர்களுக்குத்தான் ரூபாய் இரண்டாயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனாவால் கோராபட்டுச் சேலைகள் தேக்கம்.... கொள்முதல் செய்ய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை!

Published on 21/07/2020 | Edited on 22/07/2020

 

dindigul district

 

கரோனா பாதிப்பால் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான கோராபட்டுச் சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சின்னாளபட்டியில் கரோனா பாதிப்பால் கோடிக்கணக்கான மதிப்பிலான சுங்குடி, கோரா புடவைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்யாததால் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊராகும். சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கும் சின்னாளபட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சுங்குடி சேலை, பட்டுச்சேலை, கோரா பட்டுச்சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் சின்னாளபட்டியில் அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம், நம்நாடு, காந்திஜி, கமலாநேரு, அமரர் சஞ்சய் காந்தி, அண்ணா, சிலம்புச்செல்வர், ம.பொ.சிவஞானம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், சித்தையன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நெசவாளர்கள் கைத்தறி கோரா பட்டு ரக சேலைகளை நெய்து வருகின்றனர்.

 

கரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் இன்று வரை (ஜீலை) முறையாக அவர்களுக்கு நெசவு நெய்வதற்கு பாவு மற்றும் நூல் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தவிர நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெய்யப்படும் சேலைகளை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்யாததால் கூட்டுறவு சங்கங்களில் கோரா பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

 

இதனால் கைத்தறி நெசவாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கு கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. இதுபோல கோரப்பட்டுச் சேலை உற்பத்தி செய்யும் தனியார் உற்பத்தியாளர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கோரா பட்டுச் சேலைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான மதிப்பிலான கோரப்பட்டு சேலைகள் தேங்கியுள்ளன.

 

i periyasamy

 

இது போல ஆடி மாதங்களில் அம்மனுக்கு விரதம் இருக்கும் பெண்கள் மற்றும் ஓம் சக்தி வழிபாடு செய்யும் பெண்கள் சிவப்பு மஞ்சள் நிறத்துடன் வேப்பிலை படம் பிரிண்ட் செய்த சுங்குடி சேலைகளை அதிகளவில் வாங்குவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதங்களில் சுமார் 1 லட்சம் சுங்குடி சேலைகளை சுங்குடி உற்பத்தியாளர்கள் தயாரிப்பது வழக்கம்.

 

ஆனால் இம்முறை கோவில்கள் திறக்காததால் சுங்குடி சேலை உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. சுங்குடி சேலைக்கு பிரிண்ட் செய்யும் தொழிலாளர்கள் கஞ்சி தோய்க்கும் (கஞ்சி ஏற்றும்) தொழிலாளர்கள், அயர்ன் செய்யும் தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், கோடை காலத்தில் தான் சுங்குடி சேலைகளை அதிகளவில் பொதுமக்கள் பயன்படு த்துவார்கள் ஆனால் தற்போது கரோனா ஊரடங்கால் யாரும் வெளியே வராத சூழ்நிலையால் சுங்குடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன இதன்மூலம் இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

 

கைத்தறி கோராபட்டு ரக சேலைகளை உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து கோராபட்டு நூல்களை வாங்கி வந்து நாங்கள் இங்குள்ள நெசவாளர்களிடம் கொடுத்து சேலை உற்பத்தி செய்து அவர்களுக்கு நாங்கள் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். தற்போது சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம் உட்பட பெரிய நகரங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் வியாபாரம் இல்லாததால் அவர்கள் எங்களிடம் கொள்முதல் செய்ய வில்லை. அதனால் கோடிக்கணக்கான மதிப்பிலான கோரா பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன என்றனர்.

 

                   http://onelink.to/nknapp

சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படும் கோரா பட்டுச் சேலைகளை மதுரை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கும், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேச மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள் இந்தியா முழுவதும் கரோனா ஊரடங்கால் அவர்கள் (கோ- ஆப்டெக்ஸ் நிர்வாகம்) எங்களிடம் சேலைகளை (கோரா பட்டு) கொள்முதல் செய்யவில்லை. இதனால் கைத்தறி நெசவாள ர்களுக்கு கூலிப்பணம் கொடுப்பதில் கூட எங்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.


இந்த நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து ஆத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, சின்னாளபட்டி என்றாலே பட்டு நகரம் என்பார்கள். ஆனால் இன்று கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை மூன்று மாதங்களாக கொள்முதல் செய்யவில்லை எனத் தெரிகிறது. அதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கைத்தறி கோரா பட்டுச் சேலைகளைக் கொள்முதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற  முன்வர வேண்டும் என்று கூறினார்.

 


 

Next Story

சின்னாளப்பட்டியில் ஐந்து கோடி சுங்குடி சேலை தேக்கம்! குமுறும் நெசவாளர்கள்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


கரோனா பாதிப்பால் சுங்கடி நகரமான சின்னாளபட்டியில் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 10 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 5 கோடி மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

chinnalapatti sungudi sarees

 

 

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  சின்னாளப்பட்டி கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும் தமிழகத்தில் அதிக அளவில் கைத்தறி மற்றும் சுங்குடி சேலைகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாகச் சின்னாளபட்டியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தமிழகத்தில் அனைத்து முன்னணி ஜவுளி கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.

 

 

chinnalapatti sungudi sarees


கோடைக்காலத்தில் தான் சேலைகளுக்கு கஞ்சி ஏற்றப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு உற்பத்தி செய்வது வழக்கம். தற்போது கோடைக் காலம் தொடங்கிய நிலையில் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாகச் சின்னாளபட்டியில் ஊரடங்கு பின்பற்றப்பட்டுள்ளன. நெசவாளர்கள் நெய்யும் தறி கூடங்களும் பூட்டியே கிடக்கின்றன. 
 

 

http://onelink.to/nknapp

 

இதைத் தவிர வீடுகளில் தனித்தனியாகத் தட்டிப்போட்டு நெய்யும் நெசவாளர்களுக்குப் பாவு சாயம் ஏற்றிய கலர் நூல், நாடா மற்றும் தறி உபகரணங்கள் கிடைக்காததால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரின்டிங் பிரஸ் சேலைகள் பிரிண்டிங் செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. ஜவுளி கடைகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சேலைகளைப் பந்தல் போட முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் ரூபாய் 10 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் கடைகளில்  விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.
 

ssss

இது சம்பந்தமாக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் ஆறுமுகம் கூறுகையில், ஒரு மாத காலமாக நெசவாளர்கள் யாரும் தரியில் உட்கார்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வரை சம்பாதித்து வந்த நாங்கள் இன்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
 

சௌராஷ்டிரா காலனி சேர்ந்த சுரேஷ் கூறுகையில், சின்னாளபட்டியில் உள்ள பிரிண்டிங் பட்டறைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 சேலைகள் வரை பிரிண்டிங் செய்து கஞ்சி போட்டு தேய்ப்பதற்கு அனுப்பி வைப்போம். ஒரு மாதம் காலமாகச் சின்னாளபட்டி வட்டாரத்தில் எந்த ஒரு பிரிண்டிங் பட்டறையும் செயல்படவில்லை என்கிறார்.
 


 

இது பற்றி வள்ளுவர் காலனி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், சின்னாளபட்டியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். சமூக விலகலோடு செய்யும் இந்தத் தொழிலுக்கு முறையாக நூல் மற்றும் பாவு கிடைக்காததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில் இருந்துதான் தறி உபகரணங்கள் மற்றும் நூல்கள் வரும் அதைக் கொண்டு வருவதற்கு நல வாரியம் மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்கிறார். 

 

 

ip


 

சின்னாளப்பட்டி வட்டாரச் சுங்கடி சேலை உற்பத்தியாளர்கள் வட்டார ஜவுளி மற்றும் சுங்க உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ஒருமாத காலமாக சுங்குடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன.
 

 

 

 

இது சம்பந்தமாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, கரோனா பாதிப்பால் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவுத் தொழிலும், சுங்கடி தொழிலும் முடங்கிவிட்டது. கைத்தறி நெசவாளர்கள் சுங்கடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய மாநில அரசுகள் நலவாரியம் மூலம் ரூபாய்  5 ஆயிரம் நிவாரணம் உதவி உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெசவாளர்கள் தறியில் நூல் பூட்டி வெளி மாவட்டங்களில் இருந்து நூல் மற்றும் பாவு நாடா உள்ளிட்ட தறி உபகரணங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் வசதி செய்து மற்றும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று  கூறினார்.