Skip to main content

எடப்பாடி பதவிக்கு ஆபத்து என முழக்கம் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
dyfi

 

 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாயினர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலத்தில் இன்று (மே 22, 2018) மதியம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் வைக்கோலால் தயாரிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எடுத்து வந்து சாலையின் மையத்தில் போட்டு தீவைக்க முயன்றனர்.

 

dyfi

 

 


அதற்குள் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை அவர்களிடம் இருந்து தீ வைப்பதற்கு முன்பே பறித்துக்கொண்டனர். இதுதரப்பும் மாறி மாறி பறிக்க முயன்றதில் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை முற்றிலும் சிதைந்தது.

பின்னர் அவர்கள் சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். சேலம் நகர காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர், அவர்களை கைது செய்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ஆனால், அவர்கள் தரையில் படுத்துக்கொண்டு, 'வெளியேறு வெளியேறு காவல்துறையே வெளியேறு', 'எடுபிடி அரசே எடப்பாடி அரசே காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையை ஏவுகின்ற கேடுகெட்ட எடப்பாடி அரசே வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

dyfi


இதில் ஒரு போலீஸ்காரர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரவீண் குமாரை தாக்கினார். இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

dyfi


இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரவீண்குமார் கூறுகையில், ''ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை காவல்துறை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறது. இதற்கு, பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அடக்குமுறையைக் கையாண்டால் மேலும் மேலும் போராட்டம் மக்கள் அதிகரிக்கும். எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து வரப்போகிறது. இந்த அரசு தமிழக மக்களுக்கு பதில் சொல்லும் காலம் கட்டாயம் வரும்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்