12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- தேனி இடையே தினசரி ரயில் சேவை தொடங்கப்படவிருப்பதால், அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் மே 26- ஆம் தேதி அன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை- தேனி இடையேயான தினசரி ரயில் சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்கு மறுநாள் காலை 08.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்கள் வழியாக, 09.35 மணிக்கு தேனி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மறு மார்க்கமான தேனியில் மாலை 06.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 07.35 மணிக்கு மதுரை வந்தடையும். தினசரி இந்த சேவை வழங்கப்படவிருப்பதால், கல்வி மற்றும் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் ஏராளமானோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.