Skip to main content

கடைகளுக்கு துணிப்பை கொண்டு வருவோர்க்கு சிறப்பு சலுகை! -நெகிழிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

2018 டிசம்பர் முதல் 2019 அக்டோபர் வரை பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 28,11, 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பில்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

court about plastic use

 

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,   ‘கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நெகிழி பொருளுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு மட்டுமே நெகிழிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாளடைவில்,   சட்டத்திற்குப் புறம்பாக நெகிழியைப் பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது . இதனால்,  விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கை பொருட்களின் விற்பனை  நலிவடையத் தொடங்கின.   விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும்,  நெகிழி பயன்பாட்டால்  சுற்றுச்சூழல் மாசடைவது  அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, நெகிழி பயன்பாட்டிற்குத்  தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று  குறிப்பிட்டிருந்தார்.  

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில்,  ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத்  தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018 டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 28 லட்சத்து 11 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது’  என்று தெரிவிக்கப்பட்டது.  அதற்கு நீதிபதிகள்,  ‘வாழையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, பை கொண்டு வருவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது, சுய உதவிக் குழுக்கள் மூலமாக துணிப்பைகளை விற்பது  போன்ற முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஆகவே இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து, அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ என மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்