கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதே நேரம் மருத்துவமனை தரப்பிலிருந்து செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ''பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. செந்தில் பாலாஜி மீது தவறு இல்லை என்றால் நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய பாஜக அரசு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.