Skip to main content

மோசமான நிலையில் மாநகராட்சி பள்ளிகள்!; சேலம் மேயர் ஒப்புதல்! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Corporation schools in bad condition !; Salem mayor

 

சேலம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், நூலகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 

சேலம் மாநகராட்சி கல்வி நிலைக்குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில், வியாழக்கிழமை (ஜூலை 14) நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

 

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 51 துவக்கப் பள்ளிகள், 29 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள், 7 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள், கணினி உபகரணங்கள், ஆய்வகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 


இப்பணிகளை மாநகராட்சி நிதி மட்டுமின்றி பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, என்.ஜி.ஓக்களின் நிதியுதவி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

 

கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ராமசந்திரன் கூறுகையில், ''சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, நூலகம், சுற்றுச்சுவர், ஆய்வக வசதிகள் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளன. பிரச்சனைகள் உள்ள பள்ளிகளில் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, புதுப்பொலிவு மிக்க பள்ளியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார். 


மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர பொறியாளர் ரவி, கல்வி நிலைக்குழுத் தலைவர் முருகன், குழு உறுப்பினர்கள் நா.பழனிசாமி, பி.எல்.பழனிசாமி, செயற்பொறியாளர் லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.