Skip to main content

கரோனா... தவிக்கவிடும் அவசர கட்டுப்பாட்டு அறை!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


முடக்கம், ஊரடங்கு என மக்கள் நடமாடுவதற்குப் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், குடும்ப உறுப்பினர்களின் மரணம், திருமணம், மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணிக்க விரும்பும் பொதுமக்களுக்காக, அரசு ஒரு தனி கட்டுப்பாட்டு அறையைத் திறந்திருப்பதாக அறிவித்தது.  

மேற்சொன்ன அவசரங்களுக்காகப் பயணம் செய்ய விரும்புகிறவர்கள் 753000 01100 -என்ற எண்ணைத் தொடர்பு கொண்டாலோ அல்லது gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சலில் கோரிக்கை விடுத்தாலோ, வாகனத்தில் பாதுகப்பாக அனுப்பிவைப்பதாகவும் நம்பிக்கையூட்டும் வகையில்  அறிவித்திருந்தனர்.

இந்த அவசரகால கட்டுப்பாட்டு அறை, எந்த லட்சணத்தில் செயல்படுகிறது? என்பதற்கு ஒரு உதாரண சம்பவம். 

 

 chennai




மானாமதுரை அருகில் இருக்கும் ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சாகுல்ஷமீது என்பவர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவர் மகனுக்கு, அவரது சகலையான கவிஞர் ஜலாலுதீன் மூலம் அதிகாலையில் தெரிவிக்கப்பட்டது. 
 

பதறியடித்த ஜலால் குடும்பத்தினர், துக்கத்துக்குப் போவதற்காக அதிகாலையிலே அவசரகால கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டதோடு மின்னஞ்சலிலும் கோரிக்கை விடுத்தனர். வியாசர்பாடி சர்மா நகரில் வசிக்கும் அவர்களை, காவல்நிலையம், கமிஷனர்  அலுவலகம், மயிலாப்பூர் காவல் நிலையம் என அலைக்கழித்துவிட்டு, ரிப்பன் பில்டிங்கில் செயல்படும் மாநகராட்சி அலுவலகத்துக்குப் போகச் சொல்லியிருக்கிறார்கள். 

 

 chennai


 

அங்கும் ஜாலால் குடும்பம், வாகனத்தில் மானாமதுரைக்குப் போகும் அனுமதிக்காக முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. “அதிகாலையில் இருந்து போராடுகிறோம். இன்னும் எங்களை எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை. சோகத்திலும் பசியிலும் தாகத்திலும் வரிசையில் வெயிலிலும் காத்திருக்கிறோம்” என்கிறார் கவிஞரான ஜலால். 

இவரைப் போலவே பலரும் அவரவரின் துயரங்களோடு சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்படும் வேகம். ஏற்கனவே மனமொடிந்திருக்கும் அவர்களை இப்படியா அலைக்கழித்து அல்லாடவிடுவது?

அதிகாரிகளே... இந்த அவசர காலத்திலாவது அவசர உதவிகளில் வேகம் காட்ட கொஞ்சம் மனம் இறங்குங்கள்.
 


 

சார்ந்த செய்திகள்