Skip to main content

"கரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதும் விதண்டாவாதம் புரிவதும் எடப்பாடி தான்"- போட்டுத்தாக்கும் பாஜக!

Published on 18/04/2020 | Edited on 18/04/2020


கரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மருத்துவ ஆலோசனை பெற எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? கரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன" எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

 

 

eps


எடப்பாடியின் கோபாவேசம் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்திருப்பதுடன், எடப்பாடியைக் கண்டித்தும் வருகின்றன. இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராகத் தமிழக பாஜகவும் குதித்துள்ளது. எடப்பாடியின் பேச்சை அப்படியே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான  நரசிம்மன்.
 

இது குறித்து அவரிடம் நாம் பேசிய போது, "எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? என முதலமைச்சர் எடப்பாடி கேட்பது பொறுப்பான முதல்வர் பதவிக்கு அழகல்ல! மிகக் கொடிய ஒரு பிரச்சனையில் தேசமே ஒருங்கிணைந்து போராடி வரும் நிலையில் எடப்பாடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது. இரு கைகளும் தட்டினால்தான் ஓசை வரும். ஒரு கை தட்டுவது எதற்கும் பிரயோஜனமாகாது. ஆளும் கட்சி ஒரு கை எனில், எதிர்க்கட்சிகள் மற்றொரு கை! அந்த வகையில், கரோனா விவகாரத்தில் இரு தரப்பின் ஆலோசனைகளும் விவாதங்களும் முக்கியமானது. கரோனாவைத் தடுப்பதில் மருத்துவம் சார்ந்த யோசனைகளை  டாக்டர்கள் தெரிவிப்பார்கள். 
 

ஆனால், பிரச்சனைகள் சார்ந்த யோசனைகளை அரசியல் கட்சிகளால் தான் தெரிவிக்க முடியும். குறிப்பாக, எதிர்க்கட்சிகள்தான் விவரிக்க முடியும். பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமலும் அல்லது தெரிந்துகொள்ள மறுப்பதும் ஆளும் கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல ! 
 

http://onelink.to/nknapp


பாரத பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களிடமும் விவாதித்தார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடமும் மூத்த அரசியல் தலைவர்களிடமும் ஆலோசித்தார் பிரதமர். இவர்களெல்லாம் டாக்டர்களா?  ஏன், தமிழகத்தில் உங்களிடமும் (எடப்பாடி) , எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடமும் பேசினாரே! நீங்களெல்லாம் மருத்துவர்கள் என நினைத்தா விவாதித்தார்? இல்லையே! ஒரு முக்கியப் பிரச்சனையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், அரசுக்குத் தெரியாத விசயங்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து கிடைக்கும் என்பதற்காகவும் தான் விவாதித்தார். 
 

hhh


இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசிடம்  மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலிலும், கரோனோ தடுப்பு நடவடிக்கையில் உங்களின் யோசனைகளைத் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு தெரிவியுங்கள் என டாக்டர் அன்புமணிக்கு அறிவுறுத்தியிருக்கிறார் பிரதமர். ஆக, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளோடு இணைந்துதான் பொதுப் பிரச்சனையைக் கையாள வேண்டும். அதை விடுத்து, விதண்டாவாதம்  பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதைத்தான் முதல்வர் எடப்பாடி செய்து கொண்டிருக்கிறார். இது கண்டிக்கப்பட வேண்டிய விசயம்! கரோனா விசயத்தில் அரசியல் செய்வது எடப்பாடிதான். இது குறித்தெல்லாம்  டெல்லிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறோம்" என்கிறார் அழுத்தமாக!

 

 

சார்ந்த செய்திகள்