
இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை கடந்த 16ஆம் தேதி துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனடிப்படையில், சுகாதாரப் பணியில் உள்ளவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை தந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது (இதில் பல்வேறு கோல்மால்கள் நடந்தது வேறு விஷயம்). அந்த வகையில் நேற்றைய கணக்கெடுப்பின் படி, இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இரண்டு கோடியே 12 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், என பலருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்துதான், “கரோனா தடுப்பூசி மிகப் பாதுகாப்பானது. நானும் அந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வேன்” எனத் தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே, தனது அமைச்சரவை சகாக்களை தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்காதீர்கள், அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். இதனையடுத்துதான் அமைச்சர்களின் முதல் நபராக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்.