Skip to main content

மர்ம விலங்கு தாக்கி பலியான ஆடுகள்; வனத்துறையினர் தீவிர விசாரணை 

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

chinnasalem thottampatti village goat unknown animal incident 
மாதிரி படம்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). இவரது மனைவி ஜெயமணி (வயது 30). ரவிச்சந்திரன் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஆடுகள் உள்ளன. இந்த ஆடுகளை ரவிச்சந்திரன் மனைவி ஜெயமணி வளர்த்து வருகிறார். பகலில் வயல்வெளி பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் தங்கள் நிலத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று  காலை ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்ல ஜெயமணி ஆடுகள் அடைத்திருந்த பட்டிக்கு வந்து பார்த்தபோது  எட்டு ஆடுகள் இறந்து கிடந்தன.  மேலும் 3 ஆடுகள் உடலில் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. மேலும் சற்று லேசான காயத்துடன் 5 ஆடுகள் துடித்துக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயமணி கணவருக்கு தகவல் சொல்ல, கணவர் ரவிச்சந்திரன் காட்டுக்கொட்டாய்க்கு வந்தார். இறந்த ஆடுகள், கடிபட்ட ஆடுகளைப் பார்த்தபோது ஆடுகளின் உடலின் பல இடங்களில் மர்ம விலங்கு கடித்த பலமான காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, வனத்துறை அலுவலர் சத்யபிரியா, கால்நடை மருத்துவர் சரண்யா, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

 

அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகள் எப்படி இறந்தன; ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது; மர்ம விலங்கின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதா என்பதை அங்கு பதிந்துள்ள கால் தடத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆடுகளைக் கடித்த மர்ம விலங்கு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து போன ஆடுகள், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஆடுகள் என மொத்தம் 20 ஆடுகள் இறந்து போய்விட்டன. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.