Skip to main content

"அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி தருக" - முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

complete lockdown fruits and vegetables chief minister mkstalin order

 

முழு ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்குத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில், 24/05/2021 முதல் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதன் அடிப்படையில், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்குத் தடையின்றிக் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி வழங்கப்படுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (25/05/2021) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

தமிழக முதல்வர் ஏற்கனவே, வழங்கியுள்ள அறிவுரையின்படி, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆவின், மின் வணிகம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு எவ்விதத் தடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது. 

 

சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் சென்று வணிகர் சங்கத்தினரின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 24/05/2021 அன்று சென்னையில் 1,670 வாகனங்கள் மூலம் 1,400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 4,626 வாகனங்கள் மூலம் 3,500 மெட்ரிக் டன்னும், ஆக மொத்தம் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

 

இன்று (25/05/2021) நடைபெற்றக் கூட்டத்தில், பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழக முதல்வர் அறிவுறுத்தினார். இந்த சேவை நகர்ப்புறங்களில் சிறப்பாக வழங்கப்படுவதைப் போலவே, கிராமப்புறங்களிலும் வழங்கப்படுவதைக் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

 

மேலும், இன்று (25/05/2021) 13,096 வாகனங்கள் மூலம் சென்று 6,509 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகளையும் பழங்களையும் விநியோகம் செய்ய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக அடுத்து வரும் நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைத்திட, தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வேளாண்மைத்துறை டாக்டர் கே. கோபால் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்