
ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 -லிருந்து 59- ஆக உயர்த்தியுள்ளது. நேர்மையாக, நியாயமாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டு நீட்டிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே வேளையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும், ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வயதை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.