Skip to main content

சிகிச்சைக்காக விடுதிகளில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றக்கூடாது!- வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

chennai high court vellore district collector governemnt


வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களை மே 7- ஆம் தேதி வரை வெளியேற்றக் கூடாது என, வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கால் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த சுமார் 10 ஆயிரம் பேர், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 

விடுதிகளில் தங்கியுள்ள இவர்கள் செலுத்த வேண்டிய மாத வாடகையில், 50 சதவீதத்தைத் தங்கியிருப்பவர்களும், 25 சதவீத்தை அரசும், எஞ்சிய 25 சதவீதத்தை லாட்ஜ் உரிமையாளர்களும் ஏற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வந்த வெளிமாநிலத்தவர்களைக் காலி செய்யக் கூறி உரிமையாளர்கள் வற்புறுத்தி வருவதால், ஏற்கனவே அறிவித்தபடி, விடுதி வாடகை மற்றும் உணவுச் செலவை அரசு ஏற்க உத்தரவிட வேண்டும் எனவும், விடுதிகளில் தங்கியிருப்பவர்களைக் காலி செய்யத் தடை விதிக்கக் கோரியும் கருணா மிரியம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத்தையும் எதிர்மனுதாராகச் சேர்க்க உத்தரவிட்டு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 
 

http://onelink.to/nknapp

 

மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மே 7- ஆம் தேதி வரை சிகிச்சைக்காக வந்து விடுதிகளில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றக்கூடாது எனவும் வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்