Skip to main content

பொதுப்பணித்துறை ஏரியில் கலக்கப்படும் கெமிக்கல் கழிவு! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Chemical waste mixed in the public works lake!
மாதிரி படம் 

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டி காப்பர் கம்பி, பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த ஏரியை முறையாக பராமரிக்காததால் அந்த நிறுவனம் அதன் கெமிக்கல் நீரை ஏரியில் திறந்து விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.  

 

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் எனும் பெண் கூறுகையில், “ஏரியை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காததால், தனியார் நிறுவனத்தின் கெமிக்கல் நீர் இதில் திறந்து விடப்படுகிறது. கெமிக்கல் நீர் கலப்பதால், கால்நடைகளுக்கு முறையான தண்ணீர், ஏரியை ஒட்டியுள்ள பச்சை புல் உள்ளிட்டவற்றை வழங்க முடிவதில்லை. இதனால் நாங்கள் கால்நடை வளர்க்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றோம்.

 

இந்த கெமிக்கல் தண்ணீர் கலக்கும் ஏரிக்குள் நாங்கள் நடந்து செல்லும் போது, கால்களில் கொப்பளம் வருகிறது. வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, தனி நபர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்” என்றார். 

 

அதேபோல் லதா என்பவர் கூறுகையில், “கால்நடைகளை நாங்கள் ஏரிக்கரை மற்றும் ஏரிக்குள் மேய்ச்சலுக்கு எடுத்து வர முடியாமல் கஷ்டப்படுகின்றோம். ஏரியில் இருக்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்ற வேண்டும். ஏரிக்குள் கெமிக்கல் தண்ணீரை கலக்கும் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்