Skip to main content

‘12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் தகவல்! 

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Chance of rain in 12 districts Meteorological Dept informs

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (27.06.2024) வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர் மழை; ஒரே நாட்களில் 2 அடி உயர்ந்த பவானிசாகர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
continuous rain;  Bhavanisagar rose 2 feet in a single day


ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை  5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று (28/06/2024) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,894 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 62.44 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.