Skip to main content

ட்ராபிக் ரூல்ஸ்... இனி எஸ்கேப் ஆகமுடியாது! மூன்றாம் கண்ணின் அதிரடி!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
Chennai

 

 

 

நாளுக்கு நாள் பெருகி வரும் இரு, நான்கு சக்கர வாகனங்களால் சென்னை நகரமே திணறிப் போகிறது. இதில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாத சிலரால், ஒட்டுமொத்த பொதுமக்களும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இத்தனை அசவுகரியங்களையும் சரிசெய்வதற்கு போதுமான காவலர்களும் இல்லை. அதனால், இதுபோன்ற பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும்பாடாக இருந்தது. இனி அது குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை. 
 

ஆம், அதற்காக மூன்றாம் கண் என செல்லமாக அழைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம் அவர்கள். இதுவரை சென்னையின் முக்கியமான சாலைகளில் இலக்கான 15 ஆயிரத்து 345 சி.சி.டி.வி. கேமராக்களில், பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இவற்றின் மூலம் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார். 
 

எப்படி என்கிறீர்களா? ஒரு பைக்கில் அதிக இரைச்சல் தரும் சைலன்சரை மாட்டிக் கொண்டு, அதிவேகமாக அதுவும் மூன்று பேராக ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதாக எடுத்துக் கொள்வோம். தூரத்தில் ட்ராபிக் போலீஸ் இருப்பதைப் பார்த்துவிட்டால், கலெக்சனுக்கு அஞ்சி ரூட்டை மாற்றிக்கொண்டு போவார்கள்தானே? ஒருவேளை அங்கு போலீஸ் இல்லையென்றால்...? எனக்கென்னவென அதே ரூட்டில் பயணம் செய்வார்கள். இனி, போலீஸ் இல்லையென்றாலும், சிசிடிவி காட்சிகள் மூலம் அவற்றைக் கண்காணித்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமாம். 
 

அதாவது, குற்றம் செய்தவரின் வாகன பதிவு எண்ணின் மூலம், அவரைக் கண்டுபிடித்து அவரது வீட்டு முகவரிக்கே அபராதத்திற்கான செல்லான் அனுப்பப்படும். அந்தச் செல்லான் மூலம் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்தலாம். இதன்படி, சென்னையில் புத்தாண்டு இரவில் இடைஞ்சல் தரும்படியான பயணத்திற்காக 186, அதிவேக பயணத்திற்கு 57, இரைச்சல் சைலன்சர் பொருத்தியதற்காக 16 மற்றும் மூன்று பேராக பயணித்ததற்காக 141 பேர் என மொத்தம் 401 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

போலீஸே கண்டுகொள்ளாமல் விட்டாலும், இனி அந்த மூன்றாவது கண் விடாது போலிருக்கே.. அதனால, ட்ராபிக் ரூல்ஸை ஒழுங்கா ஃபாலோ பண்ணுவோமே பாஸ்?!  
 

சார்ந்த செய்திகள்

Next Story

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.