




கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்து வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அவரது தந்தை ப.சிதம்பரத்தின் வீடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தனியார் காம்ப்ளக்ஸ் கட்டடத்தில் இயங்கி வரும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் ஶ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் ரெய்டு நடக்கும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.