Skip to main content

புது வீடு கட்ட மணல் திருடிய தாசில்தார் - குண்டாஸ் வழக்கு பதிய வலுக்கும் கோரிக்கை 

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
tr1

 

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த 11 ஆம் தேதி லாரியில் மணல் அள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகா தன்னுடைய வாகனத்தில் அமர்ந்திருந்தார். 

 

மணல் கடத்தல் நடக்கும் இடத்தில் அவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தட்டிக் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் பொதுமக்களை மிரட்டி நீங்கள் எல்லோரும் வெளியேறுங்கள் என்று மிரட்ட ஆரம்பித்தார். 


தாசில்தார் ரேணுகா மிரட்டுவதற்கு காரணம் திருச்சி சமயபுரம் அருகே,  தான் கட்டி வரும் வீட்டிற்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரிய வந்தது. இதையடுத்து லாரியையும், தாசில்தாரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார் வந்து அவர்களை மீட்டுச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

இதில் தாசில்தார் திருட்டுத் தனமாக மணல் அள்ளியது உறுதியானது. இந்நிலையில் தற்போது ரேணுகாவை டி.என்.பி.எல் தாசில்தாரராக பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் உதவியாளராக இருந்த ராஜேஸ் கண்ணன் மண்ணச்சநல்லூர் தாசில்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

புகாரில் சிக்கிய ரேணுகாவை காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் சென்னையில் முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் சிபாரிசு செய்ததால் பணியிடம் மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் தாசில்தாராக இருந்த தற்போது மணப்பாறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள மணல் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட  ரேணுகா  மீது திருட்டு வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது. 

 

மனு கொடுத்தவர்கள் நம்மிடம் சாதரணமாக மணல் திருடியவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதியப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். இப்போது நேரடியாக மக்கள் மூலம் தாசில்தார் மணல் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரை டிரான்பர் செய்வது சரியா ? அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிய வேண்டும் என்று கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளோம் என்றார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.