
ஏய்... அதெல்லாம் ஃபோட்டோ எடுக்கக் கூடாது. போ... போ... என அடிக்கும் தொனியில் மிரட்டிய பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று தமிழகம் திரும்பினார். இதனால், அண்ணாமலைக்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உற்சாக வரவேற்பளிக்க பாஜக நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், கமலாலயத்தில் செய்தி சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்களும் சென்றிருந்தனர். அப்போது பாஜக அலுவலகத்திற்கு வெளியில் சாலையோரம் பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பான காட்சிகளை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் படமெடுக்க முயற்சித்துள்ளனர். இதைக் கண்ட பாஜகவினர், புகைப்படம் எடுக்க முயன்ற கேமராமேன் மற்றும் செய்தியாளர்களை ஆபாசமான வார்த்தைகளால் மோசமாக மிரட்டியுள்ளனர்.
இதனால், அதிருப்தியடைந்த பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பாஜகவினர் புகைப்படம் எடுத்தது தவறு எனக் கூறிக் கடுமையான வார்த்தைகளில் திட்டியபடியே, திடீரென அடிக்கப் பாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. செய்தியாளர்களின் மீது பாஜகவினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களது வன்மையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றன.
நேற்று முன்தினம்தான், நக்கீரன் செய்தியாளரை பாஜக பிரமுகர் எச்.ராஜா.. நீ கிறிஸ்தவனா.. வெளிய போ.. என மிரட்டும் தொனியில் பேசியது சர்ச்சையான நிலையில், இப்போது மீண்டும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.