Skip to main content

"இதனை நான் சும்மா விட போவதில்லை"- ஹெச்.ராஜா ஆவேச பேட்டி!!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022


 

BJP LEADER HRAJA PRESSMEET AT DINDIGUL

 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.

 

இந்த நிலையில், காவல்துறை மதியம் 03.00 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி  நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை. நிகழ்ச்சி இரவு நேரம் நடைபெறுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300- க்கும் மேற்பட்டவர்கள் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை, பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது.

 

மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30) 2 அமலில் இருப்பதாகக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாகக் கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்த வந்துக் கொண்டிருந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார்  மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100- க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.

BJP LEADER HRAJA PRESSMEET AT DINDIGUL

அதனால் போலீசாருடன் ஹெச்.ராஜா வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

 

இதுகுறித்து  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது, "இந்து மதத்தில் தான் பிறந்தது தவறா? இந்து மதத்தில் மலைகளையும், ஆறுகளையும், குளங்களையும் வழிபட சொல்லி கூறப்பட்டு இருக்கிறது. அதற்காக பழனி வந்த தன்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருக்கின்றனர். 

 

பழனிக்கு நெய்க்காரப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசார் என்னை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை நான் சும்மா விட போவதில்லை. இந்துக்களுக்கான நீதியைக் கண்டிப்பாக நான் பெற்றுத் தருவேன். மேலும் எவ்வித காரணமும் கூறாமல், என்னை கைது செய்த திண்டுக்கல் போலீசாருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்" எனக் கூறினார். இதனால் பழனி பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.