தலைமைக் காவலருக்கு அடி; ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகிலுள்ள மொடச்சூர் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது-42). இவர் கோபிச் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் தளமைக்காவலராக பணிபுரிகிறார்.
இவர் உதவி ஆய்வாளர் விஜயராஜன் மற்றும் போலீசாருடன் முருகன்புதூர் பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு, 8:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது யமாகா கிரக்ஸ் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.
மேலும், அவரிடம் வாகனத்துக்கு உரிய ஆவணங்களை காட்டுமாறு போலீசார் கேட்டனர். அவரோ வண்டிக்கான ஆவணங்களை தர மறுத்து, போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து போலீசாருடன் ஏற்ப்பட்ட வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஏட்டு வெற்றிவேலை அந்த நபர் கன்னத்தில் அறைந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை வளைத்து பிடித்து, காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் முருகன்புதூரை சேர்ந்த நந்தகுமார் (வயது-28) என்பது தெரிந்தது. மேலும் அவர் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி கொடுப்பவர் என்பதும் தெரிய வந்தது. தலமைக்காவலர் வெற்றிவேல் அளித்த புகாரின்படி, நந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவசுப்பிரமணியம்