திருநெல்வேலியில், குளிக்கச் சென்ற இரு பட்டியலின இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆச்சிமடத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 30 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவரது சாதிப் பெயரைக் கேட்டும் கற்களால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.