Skip to main content

கொள்ளை அடிக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை! - அன்புமணி பேச்சு!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
anbumani


பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வைகை ஆறு வால்பாறை கிராமத்திலிருந்து வைகை ஆற்றை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு வைகை ஆறு விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கினார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் துவக்க நிகழ்வாக வைகை ஆறு உருவாகும் இடமான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலையின் அடிவாரமான வால்பாறைக்குச் சென்று அப்பகுதியில் ஓடக்கூடிய மூலவகை ஆற்றுக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது அப்பகுதி மக்களிடம் ஆற்றின் நீர் வரத்து பற்றியும், குறைகளையும் கேட்டறிந்த அவர் அங்குள்ள அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு விட்டு மக்களுக்கும் மரக்கன்றுகளை கொடுத்தார்.

அதன் பின் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியவர், வைகை ஆறு பயணிக்கும் பாதைகளான வருசநாடு, மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வழியாக வந்து வைகை அணையை பார்த்து விட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நிலைக்கோட்டைக்கு வந்தார். அப்பொழுது பேசிய அன்புமணியோ...

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும். மைனாரிட்டி அரசு தான் இந்த எடப்பாடி அரசு. சாதுமணல், கிரணைட் மூலம் கொள்ளை அடிக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை. ஆட்சி என்றால் நிர்வாகம் சரியில்லை எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அதுபோல் தமிழகத்தில் எல்லா உரிமையும் இழந்து நிற்கிறோம். தொடர்ந்து இந்த அரசு தமிழகத்தை ஆளுவது நல்லதல்ல. இருக்கிற வரைக்கும் கொள்ளை அடித்து விட்டு போகலாம் என்று நினைக்கிறார்கள்.

மத்தியில் பிஜேபி கூட்டணி இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு சின்ன பிள்ளையிடம் கேட்டால் கூட பிஜேபி வழியில் இந்த எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்லுவார்கள் தற்பொழுது மக்களை எடப்பாடி சந்தித்து வந்தாலும் எடப்பாடி உள்பட அனைவரும் வரக்கூடிய தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள். வைகையை போல் காவேரி தாமிரபரணி ஆற்றுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்