சாதி பாகுபாடு காட்டும் மல்லாங்கிணர் சார்பு ஆய்வாளர்!
-பொய் வழக்கால் குமுறும் பட்டியல் இனத்தவர்!
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/20/New Folder/makkal.jpg)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இங்குள்ள மக்கள் மல்லாங்கிணர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் வீரணன், தங்கள் மீது பொய்வழக்குப் போட்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த 4, 5 வருடங்களாகவே உள்நோக்கத்துடன், சாதி அடிப்படையில், அவர் அப்படி செயல்பட்டு வருவதாகக் குமுறுகிறார்கள்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பத்தினர் மேட்டுப்பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வருடம்தோறும் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடமும் செப்டம்பர் 11-ஆம் தேதி 5 வாகனங்களில், போலீசார் அறிவுறுத்தலின்படி, உரிய அனுமதி பெற்று சென்று வந்திருக்கின்றனர். ஆனால், மல்லாங்கிணர் காவல்நிலையத்தில் இம்மக்கள் விதிகளை மீறினார்கள் என்று வழக்கு பதிவாகியிருக்கிறது.
இதுகுறித்து செல்வம் என்பவர் “மாணவர்கள் மீதெல்லாம் வழக்கு போட்டிருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் வீரணன். மொத்தம் 35 பேர் மீது வழக்கு. எங்களை மீறி பரமக்குடிக்கு போயிருவீங்களான்னு சவால் விட்டார். இப்போது வழக்கு போட்டிருக்கிறார்.” என்றார் வேதனையோடு.
தங்கள் மீது போட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்; சாதிபாகுபாடு காட்டிவரும் சப் இன்ஸ்பெக்டர் வீரணனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மேட்டுப்பட்டி கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் மனு கொடுத்திருக்கின்றனர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்