Skip to main content

அதிமுக ஆட்சியில் விழுப்புரம் நகராட்சியில் முறைகேடு ... உயர் அதிகாரி விசாரணை!!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
AIADMK rule abuse in Villupuram municipality ... High official investigation

 

விழுப்புரம் நகராட்சி ஒரு மாநகராட்சி அளவிற்கு அந்தஸ்தை உயர்த்தக்கூடிய அளவுக்குப் பெரிய நகராட்சி; 36 வார்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அகமது என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகளுக்கு விடப்பட்ட சாலை மற்றும் கட்டடக் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன. அதில் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி அதில் பலகோடி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நகராட்சிப் பணிகளுக்கு அரசு விதிமுறைகளை மீறி டென்டர் நடத்தப்பட்டது. ஓபன் டெண்டர் நடத்தாமல் ரகசியமான முறையில் டெண்டரை முடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவந்துள்ளனர். நகராட்சியில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் வீட்டு இணைப்புகள் கொடுக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பாதாள சாக்கடையில் வீட்டு இணைப்புக்காக மீண்டும் பள்ளம் தோண்டியதால் அதில் 50 கோடிக்கு மேல் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பணிகளை அரசு வழிகாட்டு நெறியைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அப்போதைய நகராட்சி ஆணையர் வழங்கியதாகவும் இதன் மூலம் அரசு விதிமுறைகளை மீறி ஒப்பந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன என அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் நகராட்சி தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணி நடைபெற்றுவருகின்றன. இதனால் நகராட்சி குப்பை அகற்றும் பணி முழுமையாக நடைபெறவில்லை எனவே நகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றபோது. அப்போதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக கடிதம் மூலம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இவை அனைத்தையும் அகமது தமது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்துமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை அதிகாரியாக நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குனர் விஜயகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (22.06.2021)  விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து தற்போதைய ஆணையர் தக்ஷ்ணாமூர்த்தியிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளார்.

 

அதேபோல் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் தொடர்பாக நகராட்சி பொறியாளர் மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே புகார் அளித்துள்ள நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அகமதுவிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை அதிகாரி விஜயகுமார் தற்போது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை முழுமையாக தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் வரைமுறையின்றி விதிமுறை இன்றி பல்வேறு முறைகேடுகள் பல துறைகளில் நடைபெற்றுள்ளன. அதில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு சாத்தியம் உண்டு என்கிறார்கள் விழுப்புரம் நகராட்சியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.