Skip to main content

மணல் கடத்தலில் லஞ்சம் குவிப்பு! -கதிகலங்கும் போலீஸ் அதிகாரிகள்!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

மணல் கடத்தலில் லஞ்சப் பணம் பெற்ற போலீஸ்காரர் ஒருவரை துணிச்சலாகக் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார். எஸ்.பி.யின் அந்தத் துணிச்சல் நடவடிக்கை தமிழகத்தில் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் காவல் அதிகாரிகள்.

 

Bribe in sand smuggling

 

நெல்லை மாவட்டத்தின் உவரி காவல் நிலைய போலீஸ் ஆய்வாளர் சாந்தி செல்வி, இரவு ரோந்திலிருந்த போது, மணல் லாரி ஒன்றை சோதனையிட்டிருக்கிறார். நடைச்சீட்டோ, மணல் பெர்மிட் எதுவுமில்லாமலிருந்ததால் அதைக் கைபற்றியவர், அது தொடர்பாக, உறுமன்குளம் சின்னத்துரை, முத்துக்குமார், கண்ணன் மூன்று பேரைக்கைது செய்திருக்கிறார். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சின்னத்துரையின் செல்லை ஆய்வு செய்ததில் அதில் திசையன்விளை, காவல் ஆய்வாளரின் டிரைவரான போலீஸ்காரர் சிவாவின் வாட்ஸ்ஆப் எண்கள் ஏராளமாக இருந்ததோடு, அதில் மணல் கடத்தலுக்கு தகுந்த நேரத்தையும் குறிப்பிட்டிருந்ததோடு, மணல் கடத்தலுக்கான லஞ்சப் பணம் பல தடவை கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இருந்ததை ஆவணப்படுத்திய இன்ஸ்பெக்டர், கூடுதல் தகவலாக, மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக எஸ்.பி. தனிப்பிரிவின் ஏட்டு நந்த கோபால் மேற்கொண்ட மூவ்மெண்ட் பற்றித் தெரியப்படுத்தி மணல் கும்பலை உஷார்படுத்தி மணல் கடத்தலுக்கு உதவியதையும் தெரிந்து அதிர்ந்திருக்கிறார்.

 

இதையடுத்து விசாரணை ஆதாரங்கள் முழுவதையும் எஸ்.பி.யான அருண் சக்தி குமாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து அவரது ஆலோசணையின் படி, போலீஸ்காரர் டிரைவர் சிவாவைக் கைது செய்து அவரிடம் மேல் விசாரணை நடத்தியிருக்கிறார்.

 

Bribe in sand smuggling

 

மேலும் விசாரணையில் திசையன்விளை காவல் நிலையத்தின் முக்கிய அதிகாரிகளுக்கும் மணல் மாமூல், டிரைவர் சிவா மூலம் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்துக் கைதான சிவாவை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து மணல் கடத்தல் கும்பலுடன் தொடர் தொடர்பிலிருந்த திசையன்விளை காவல் நிலைய ஏட்டு ஒருவர், இதன் சூத்ரதாரி என்றும் தெரியவந்துள்ளதாம். இதையடுத்து, அவர் குறிப்பிட்ட அந்த ஏட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.

 

மணல் கடத்தலுக்கு உடந்தை, லஞ்ச விவகாரம் போன்றவை வெளியேறிய அடுத்தகணம், லஞ்சத்தில் பங்கு பெற்ற அதிகாரி ஒருவர் தனது பெயரை சொல்லிவிட வேண்டாம். பதிலுக்கு அவருக்கு உதவுவதாகக் கெஞ்சிய தகவலும் ஓடுகின்றன.

 

கடந்த வருடம் திருட்டு மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அருகிலுள்ள விஜய நாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டு விவகாரமானதும் இந்தப் பகுதியில்தான். தற்போது போலீஸ்காரர் ஒருவர் மூலம் மணல் லஞ்சம் கைமாறியது பிடிபட்டு கைது வரை போயிருக்கிறது.

 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் காவல் லிமிட்டில் நடந்த கொலை ஒன்றில் முக்கிய குற்றவாளி மறைக்கப்பட்டதிலும் வைட்டமின் எம் கைமாறிய தகவலும் தற்போது கசியத் தொடங்கியிருக்கிறது.

 

நுங்கு தின்றவர்கள் தப்பிவிட்டனர். அதைத் தொட்டு நாவில் தடவியவர் சிக்கிக் கொண்டார் என்கிற சூசகத் தகவலும் ஒடுகிறது.

 

மணல் லஞ்ச விசாரணை முறைப்படி, நெருக்கடியின்றித் தொடருமானால், அதிகாரிகள் உட்பட போலீஸ்காரர்கள் சிக்குவார்கள் என்பதே பரவலானப் பேச்சு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.