Published on 30/04/2020 | Edited on 30/04/2020

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மட்டும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
நேற்று முன்தினம் 103 பேரும், நேற்று 94 பேரும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இதுவரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேர் அறிகுறியே இல்லாமல் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் இயங்கிய 350 கடைகளுக்கு சீல் வைக்க வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நோய் பரவாமல் தடுக்க நேர கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இயங்கியதால் சீல் வைக்கப்பட்ட இந்த 350 கடைகளையும் மூன்று மாதங்களுக்கு திறக்க முடியாது என தெரிவித்துள்ளார். தற்பொழுதுவரை சென்னையில் கரோனாவால் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 768 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.