![7.5 percent quota should not be charged to medical students](http://image.nakkheeran.in/cdn/farfuture/nCDVRpRSMDqY-dggN8No8Iug8S8KpopD1Ix0UIBIgfQ/1691210868/sites/default/files/inline-images/994_170.jpg)
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டீன் கீழ் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள்.
இந்த நிலையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர், சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்விக் கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்விதக் கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது.
இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவிகள், ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்துவித கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.